Thursday 31 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 9

நீராகி நீளகலந் தானே யாகி
..நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
..பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
..ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
..பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


நீராகி நீள் அகலம் தானேயாகி
..நிழலாகி நீள்விசும்பின் உச்சியாகிப்
பேராகிப் பேருக்கு ஓர் பெருமையாகிப்
..பெருமதில்கள் மூன்றினையும் எய்தானாகி
ஆரேனும் தன் அடைந்தோர் தம்மையெல்லாம்
..ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பாராகிப் பண்ணாகிப் பாடலாகிப்
..பரஞ்சுடராய்ச் சென்று அடிகள் நின்றவாறே


சிவபெருமான்:


1. நீராகவும், நீரினது தன்மையான ரசமாகவும் (சுவை) ஆனார்.
2. உலகின் நீளம், அகலம் ஆனார்
3. நிழல் - இந்த இடத்தில் ஒளியைக் குறிக்கும்
4. நீண்ட ஆகாயத்தின் உச்சியானார்
5. புகழும், புகழுக்குரிய பெருமையாகவும் ஆனார்
6. திரிபுரத்தை அம்பு எய்தி எரித்தவரும் அவரே
7. தன்னை அடைக்கலமாய் அடைந்தோரை ஆட்கொண்டு அருள வல்லவரும் அவரே
8. பார் = பூமி. பூமியாகவும், பூமியின் பொறுமை குணமாகவும் ஆனார்
9. இசைக்கப்படும் ராகமாகவும், அந்த ராகத்தில் பாடக்கூடிய பாடலாகவும் ஆனார்
10. மேன்மையான சுடரொளியாகவும் ஆனார்.

No comments:

Post a Comment