Monday 4 September 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 10

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
..மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
..பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
..பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
..எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


மாலாகி நான்முகனாய் மா பூதமாய்
..மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்
பாலாகி எண்திசைக்கும் எல்லையாகிப்
..பரப்பு ஆகிப் பரலோகம் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப்
..பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
ஏலாதன எல்லாம் ஏல்விப்பானாய்
..எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே


எழுகின்ற சுடரான எம்பெருமான் சிவன்,


1. திருமால், பிரமன் ஆனார்
2. ஐம்பெரும் பூதங்கள் ஆனார்
3. பெருக்கம் (பிறப்பு அல்லது வளர்ச்சி), சுருக்கம் (இறப்பு அல்லது தேய்தல்) ஆனார்
4. மகிழ்ச்சியாகவும் ஆனார்
5. எட்டுத் திக்குப் பாலர்களானார். அந்தத் திசைக் கூறுகளாகவும், அதன் எல்லையாகவும் ஆனார்
6. பரப்பு - மண்ணுலகம் ஆனார்.
7. மண்ணுலகைத் தாண்டி இருக்கும் சிவலோகமும் ஆனார்
8. பூலோகம் (பூமி) , புவலோகம் (பித்ரு லோகம்), சுவலோகம் (சுவர்க்கம்) இவையாகவும் ஆனார். (பூ:, புவ: சுவ:)
9. இந்த உலகங்களில் உள்ள வஸ்துக்களாய் ஆனார்
10. இந்த உலகங்கள் தோன்றுவதற்கு முன்னிருந்தே இருப்பவனும் ஆனார்.
11. தனித்து இயங்கமுடியா உலகங்களை (ஜடப் பொருட்கள், ஜட உலகங்கள் எனவும் சொல்வார்) எல்லாம் இயங்கவைப்பவனும் ஆனார்.

No comments:

Post a Comment