Wednesday 23 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 5

தீயாகி நீராகித் திண்மை யாகித்
..திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
..தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
..இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


தீயாகி நீராகித் திண்மையாகித்
..திசையாகி அத்திசைக்கு ஓர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வுமாகித்
..தாரகையும் ஞாயிறும் தண்மதியுமாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
..இரதங்கள் நுகர்வானும் தானேயாகி
நீயாகி நானாகி நேர்மையாகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்றவாறே


நெடிய சுடராய் நிமிர்ந்த சிவபெருமான்:


1.தீயின் வெம்மையாகவும், நீரின் குளிச்சியாகவும், நிலத்தின் திண்மையாகவும் ஆனார். (இங்கு இந்த மூன்று பூதங்களின் குணம் கூறப்பட்டுள்ளது)
2. எட்டுத் திக்குகளாகவும், அத்திசையின் தெய்வமாகவும் ஆனார்.
3. தாய், தந்தை, பற்றுதலுக்கு உரிய துணையாகவும் ஆனார்
4. வானில் காணப்படும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் இவைகளாகவும் ஆனார்.
5. காய், பழம், பழத்தின் சுவை, அந்தச் சுவையை உணருபவராகவும் ஆனார்
6. நீ (second person), நான் (first person) என்றும் ஆனார்
7. (நேர்மை = நுண்மை) நுண்ணிய பொருளாகவும் ஆனார்.

No comments:

Post a Comment