Wednesday 26 October 2016

நமச்சிவாயப் பதிகம்

ராகமாலிகை - ஆதி தாளம் 

1. காமாஸ்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

2. கல்யாணி:
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.

3. சரஸ்வதி:
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

4. ஷண்முக ப்ரியா:
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

5. சாமா:
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.

6. அடாணா:
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

7. ரஞ்சனி:
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.

8. சஹானா:
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

9. ஹிந்தோளம்:
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

10. சுருட்டி:
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Tuesday 25 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 10

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயபத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே

பொருள்:

மாப்பிணை தழுவிய - மாப்பு இணை தழுவிய. மாப்பு - மான் குட்டி
பூப்பிணை திருந்தடி - பூ பிணைந்த திருவடி
நாப்பிணை தழுவிய - நா - நாக்கு. நாவினில் நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தினை வைத்த அடியார்கள்.

மானைக் கையில் ஏந்தியவானும், மாதினை (பெண்) ஒரு பாகத்தில் கொண்டவனும்,   மலர் மாலைகள் சார்த்தப் பட்ட திருவடிகளைக் கொண்டவனுமான சிவனை, மனங்கனிந்து கைதொழுது, நாவில் நமச்சிவாய பதிகத்தை கொண்டு அவனைத் துதிப்போர்க்கு எவ்வித துன்பமும் இல்லை.

பாடல் கேட்க:

ராகம் - சுருட்டி
தாளம் - ஆதி


Check this out on Chirbit

Thursday 20 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 09

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்    
நன்னெறி யாவது நமச்சி வாயவே

பொருள்:

முன்னெறி - முதல் நெறி / தலைசிறந்த வழி
நெறி - வழி.
சிவபெருமான் காட்டிய அவரின் நெறியே சிறந்த வழியாகும். அந்த வழியை தேர்ந்தெடுத்தோமானால், முக்திப் பெறுவது உறுதி (திண்ணம்).

அவ்வாறு, அந்த நெறியை தேர்ந்தெடுத்து, அப்பிரானை அடைந்தவர்களுக்கு, நல்ல வழியாக துணை நின்றது, நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமே ஆகும்.

பாடல் கேட்க:
ராகம் - ஹிந்தோளம்.
தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Monday 17 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 08

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே

பொருள்:
இல்லத்தில் ஏற்றும் விளக்கானது, வீட்டில் உள்ள இருளை நீக்க வல்லது.
ஆனால் நமச்சிவாய என்னும் மந்திரம், சொல்லின் (வேதத்தின்) அகத்தில் (உள்ளே) விளங்குவதாகும். சோதி நிறைந்தது. தேஜஸ் உடையது. பலரும் காணக்கூடிய பிரகாசம் கொண்டது. நல்லனவற்றை அருளக்கூடியது. நல்லவற்றுள்ளே குடிகொள்வது.

பாடல் கேட்க:
ராகம்: சஹானா
தாளம் - ஆதி

Check this out on Chirbit

Sunday 16 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 07

வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஒடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே

பொருள்:

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

வீடினார் - வீட்டுப் பேறு அடைந்தனர்.
உலகினில் - உலகு இனி இல் (இல்லை) என்று உலகப்பற்றை விட்டனர்.

அதாவது, உலகம் இனி இல்லை என்று பற்றை விட்ட, சிறந்த தொண்டர்கள், வீடுப் பேற்றினை அடைந்தனர்.

அடியேனும், அவர்களோடே சேர்ந்து, அவர்கள் சென்ற வழியே சென்றேன். எம்பெருமானின் உருவை, அகக்கண்ணில் கண்டு மகிழ்வுற்றேன்.

நான் திருவைந்தெழுத்தை (நமசிவாய) நாடினேன். என்னையும் அந்தத் திருவைந்தெழுத்து நாடிற்று.

பாடல் கேட்க:

ராகம் - ரஞ்சனி
தாளம் - ஆதி

Check this out on Chirbit

Friday 14 October 2016

நமிச்சிவாயப் பதிகம் - 06

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே

பொருள்:

சலமிலன் - சலம் இலன் - சலனங்கள் இல்லாதவன்.
சங்கரன் - நன்மை செய்யும் கரம் கொண்டவன்.

சலனமில்லாத, சங்கரன், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே நன்மைகள் செய்வார். தன்னைச் சாரா நாத்திகர்களுக்கு (வேதத்தை த்வேஷிப்போர்க்கு) நன்மைகள் செய்ய மாட்டார்.

சிவனைச்சார்ந்தவர்கள், எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவரவர்க்கு எவ்வளவு நன்மை தர முடியுமோ அவ்வளவு நன்மைகளைக் கொடுப்பது, நம சிவாய என்ற ஐந்தெழுத்து.

பாடல் கேட்க:
ராகம் - அடாணா, தாளம் - ஆதி.


Check this out on Chirbit

Thursday 6 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 05

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்  
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி 
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே 

பொருள்:

வெந்த நீறு அருங்கலம் விரதிகட்கு எலாம் - வெந்த நீறு - திருநீறு (அ) விபூதி. விரதம் மேற்கொள்பவர்க்கு அணிகலன், திருநீறு.

அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் - அந்தணர்களுக்கு அணி, அருமையான நான் மறை (வேதம்) மற்றும் அதன் அங்கங்கள் ஆறு (சிக்ஷை, கல்பம் , வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம்).

திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி - திங்கள் - சந்திரன். நிலவுக்கு அணிகலன், சிவபெருமானின், நீண்ட முடி.

நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே - நம் அனைவருக்கும் அணிகலன், நமசிவாய என்னும் திரு ஐந்தெழுத்தே ஆகும்.

பாடல் கேட்க:
ராகம் - ஸாமா, தாளம் - ஆதி 

Check this out on Chirbit

Friday 30 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 04

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே

பொருள்:
இடுக்கண் பட்டு இருப்பினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளினாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே

இடுக்கண் - துன்பம். எவ்வளவு துன்பத்தில் கிடந்தாலும், நம்பெருமான் சிவனை விட்டு அகன்று, வேறொருவரைப் பார்த்து, "நீங்கள் என் துன்பத்தை போக்குகிறீர்களா?" என்று கேட்க மாட்டோம். சிவன் அவ்வாறு நம்மை விடமாட்டார்.

மலையின் அடியில் மாட்டிக்கொண்டு தவித்தாலும், சிவபெருமானின் அருள், நம் நடுக்கத்தை கெடுத்துவிடும். அந்த பஞ்சாக்ஷர மந்திரம் அப்படிப்பட்ட மகிமை வாய்ந்தது.

பாடல் கேட்க:
ராகம்: ஷண்முகப்ரியா, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Thursday 29 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 03

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

பொருள்:

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
- வானின் உயரத்திற்கு விறகுகள் அடுக்கி வைத்தாலும், அதனை உண்ணும் விதமாக ஒரு தீப்பொறி சென்றால், அனைத்தும் எரிந்து சாம்பாலாகி விடும்.

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்ச்சிவாயவே
- அதுபோல, இவ்வுலகினில் நாம் செய்த பாவங்கள் - வானளாவ அடுக்கிய விறகுகள். அப்பாவத்தை எரித்து அழிக்கும் தீப்பொறி - நமசிவாய என்னும் ஐந்தெழுத்தாகும்.

பாடல் கேட்க:
ராகம் - சரஸ்வதி, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Wednesday 28 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 02

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே

பொருள்:

அருங்கலம் - ஆபரணம் அல்லது உயர்வு/பெருமை

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை - பூக்களுக்கு ஆபரணம் போன்றது, விரிந்த இதழ்கள் கொண்ட தாமரை.

ஆவினுக்கு அருங்கலம் அரனஞ்சாடுதல் - ஆ - பசு. பசுவிற்கு உயர்வு, இறைவன் அபிஷேகத்திற்கு அது கொடுக்கும் பால்.

கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது - கோ - அரசன். கோட்டம் - வளைவு. அரசனுக்கு அழகு, நீதி தவறாமல் நிற்பது. எதற்காகவும் நீதியிலிருந்து வளைந்து செல்லக்கூடாது.

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே - நம் நாவிற்கு ஆபரணம், நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரம்.

பாடல் கேட்க;
ராகம் - கல்யாணி, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Tuesday 27 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 01

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பொருள்:

சொற்றுணை வேதியன் - வேதத்தினை அறிய உதவும் (துணையாக) விளக்கமாக (பாஷ்யம்) இருப்வன் சிவபெருமான்.

சோதி வானவன் - எங்கும் பரவி ஒளிரும் சோதி வடிவானவன்.

பொற்றுணைத் திருந்தடி - பொற்றுணை - பொன் போன்ற, ஈடு இணையில்லா அல்லது அந்த திருவடிக்கு நிகர் அதுவே (இணையடிகள்)

பொருந்தக் கைதொழ - நாம் மனம் பொருந்தி கைதொழ, கைகூப்ப

கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் - கல் தூண் ஒன்றை நம்மோடு கட்டி, கடலில் நம்மை வீசி எறிந்தாலும்,

நற்றுணை ஆவது நமச்சிவாயவே - நமக்கு நல்ல துணையாக வருவது, நம்மைக் காப்பது நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரம்.

அப்பர் பெருமானை, சமணர்கள் கல் தூணோடு சேர்த்துக் கட்டி, கடலில் பாய்ச்சினார்கள். அவர் நமசிவாய மந்திரத்தின் துணைக்கொண்டு, பாதுகாப்பாக  கரை ஒதுங்கினார். சைவத்தை நிலைநாட்டினார். அந்த இடமே திருப்பாதிரிப்புலியூர்  எனப்படும் கடலூர் ஆகும். இப்பதிகத்தை பாடி அவர் கரைசேர்ந்தார் என்பது வரலாறு.

பாடல் கேட்க;
ராகம் - கமாஸ், தாளம் - ஆதி

Check this out on Chirbit